என்.ஆர்.ஐக்கள் பற்றிய ஜூ.வி கட்டுரையை முன்வைத்து...
இந்த வார ஜூனியர் விகடனில் "
இந்தியனே வெளியேறாதே" என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தியாவில் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை தேடிக் கொள்வதை பற்றிய கடுமையான விமர்சனங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
வெளிநாட்டவர்களின் ஆய்வுக்கூடங்களில் பணியாற்றும் இந்தியர்களால் அந்த நாடுதான் முன்னேறுகிறது. இந்தியாவுக்கு பலனில்லை. நாஸாவிலும், மைக்ரோஸாஃடிலும் பணிபுரிபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களே. ஆனால் அவர்களிடம் "தேசப்பற்று என்ற சமாச்சாரம் தேடிப் பார்த்தாலும் இல்லை", "தங்களை இந்தியர்கள் என்று குறிப்பிட்டுக்கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்" என்றெல்லாம் கட்டுரையாளர் என்.ஆர்.ஐ களை குற்றம் சாட்டுகிறார்.
இன்னொரு நாட்டை நாடிச் செல்வதில் ஒருவனுக்கு இருக்கும் சூழ்நிலை அழுத்தங்கள், அதன் பின்னணியிலுள்ள சமூகவியல் காரணங்களைப் பற்றிய விரிவான ஆய்வு இக்கட்டுரையில் கிடைக்கலாம் என்று நினைத்து படிக்க ஆரம்பித்து, முடிவில் ஏமாந்தேன். வழக்கமான பல ஜூ.வி கட்டுரைகளைப் போன்றே உப்புபெறாத சமாச்சாரங்களை மேற்கோள் காட்டி மூன்று பக்கங்களுக்கு இழுத்து, முடிவில் இந்தியர்களை மூளைச்சுரண்டல் செய்வதாகக் கூறி அமெரிக்கா முதலிட்ட நாடுகளையும், அங்கே பணிபுரியும் இந்திய இளைஞர்களையும் வசைபாடி முடித்திருக்கிறார்கள்.
இக்கட்டுரை ஒருபுறம் இருக்க, இதே பொருளில் நடைபெற்ற விவாதம் ஒன்றையும் அண்மையில் தொலைக்காட்சியில் கண்டேன். இவர்களின் அடிமன ஆதங்கத்தை புரிந்துகொள்ளும் அதேவேளை, "நீ இங்கேயே வாழ்ந்து, மறைந்தால்தான் இந்தியன்; இல்லையெனில் நீ அந்நியன்" என்பதாகிய இவர்களின் தேசப்பற்றுக்கான வரையறையை நினைத்து தலைச்சுற்றுகிறது.
ஒவ்வொருவனும் பிறப்பது பிழைப்பதற்கே. அவன் மட்டுமல்ல, அவனது குடும்பமும்; அவன் வாழ்வுடன் பின்னியுள்ள பொறுப்புகளும்.. இன்னும் பல காரணங்களும் அவனது தேவைகளை நிர்ணயிக்கின்றன. அதற்கான வாய்ப்பும், வசதியும் கிடைக்கும் இடம்நோக்கி அவனவனின் இயல்பான இடப்பெயர்ச்சி அமைகிறது. இதற்கு எல்லைக் கட்டுப்பாடு என்பதெல்லாம் கவைக்கு உதவாதது.
என்.ஆர்.ஐக்களின் தேசப்பற்று கேள்விக்குரியது என்றால் தென்னாப்பிரிக்கா சென்று பணியாற்றிய தேசப்பிதா காந்தியும் அதே மதிப்பீடுகளுக்கு உட்பட்டவரா? இல்லை., அனைத்து பட்டதாரி இளைஞர்களுக்கும் இங்கேயே தகுதியான வேலை கிடைத்து விடுகிறதா? அப்படிக் கிடைத்தால் எவன்தான் குடும்பத்தை பிரிந்து வாழ தலைப்படுவான்?
அதே கட்டுரையாளர் இன்னொரு சப்பை வாதத்தை முன்வைக்கிறார். அதாவது, வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களாவது பரவாயில்லை; அங்கே சம்பாதித்து இங்கே அனுப்பி வைக்கிறார்கள்; நமக்கும் கணிசமான அந்நிய செலாவணி கிடைக்கிறது. ஆனால் மற்ற நாடுகளுக்கு செல்பவர்கள் அங்கேயே செட்டிலாகி விடுகிறார்கள் -- என்கிறார். தேசப்பற்றுக்கு இவர் வரித்துக்கொண்டுள்ள வரையறை சில பாராக்களிலேயே மாபெரும் திரிபடைந்து, பணத்தின் அடிப்படையிலான மதிப்பீடாக பரிணமிக்கிறது.
இரு ஊடகங்களிலும் இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தவர் ஒருவரும் தமது வாதத்தின் ஒரு இடத்திலும் இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் பற்றி மூச்சு விடவில்லை. ஒரே ஒரு காலியிடத்துக்கு வந்து குவியும் ஓராயிரம் விண்ணப்பங்கள் பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை. தான் அன்றைய பொழுதில் பற்றிக்கொண்டிருக்கும் தலைப்பை தாங்குவதற்கு ஒரு பட்டி மன்ற பேச்சாளன் வைக்கும் முரட்டு வாதங்களாகவே இவர்களின் என்.ஆர்.ஐக்கள் பற்றிய விமர்சனங்கள் எனக்குத் தெரிகின்றன.
என்னுடைய கவலையெல்லாம் இதையெல்லாம் பார்த்து, படித்து, கருத்துக்களை அப்படியே மனதில் வாங்கிக்கொள்ளும் பாமர வாசகனைப் பற்றித்தான்.
பின்குறிப்பு: நான் என்.ஆர்.ஐ. அல்லன்.