நினைத்தேன் எழுதுகிறேன்
 
  படித்தது: கடைசி சல்யூட்

போர்முனையின் யதார்த்தம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. வீழ்த்துதலும், வீழ்த்தப்படுதலுமே பிரத்தியட்சமாக, நாளை என்ற நாள் பற்றிய உத்தரவாதம் இல்லாத வாழ்க்கைமுறை போர்வீரனுடையது. தன் இலக்கு நோக்கிய பயணத்தில் அவன் எதிர்கொள்பவர்களெல்லாம் அவனுடைய எதிரிகள்.

எதிரிகளுடன் போரிடுவதில் புதுமையில்லை. ஆனால், தன் எதிர்நிலையில் ஆயுதமேந்தி நிற்பவர்கள் தெரிந்த முகங்களாக, ஒரு காலத்தில் தன்னுடன் தோளோடு தோள் உரசி ஒரே படைப்பிரிவில் பணியாற்றியவர்களாக, அதிலும் சிலர் முன்பு நெருங்கிய தோழர்களாகவும் இருந்தவர்கள் எனும்போது, அக்கணத்தில் அப்போர்வீரனின் மனநிலை எத்தகைய குழப்பங்களுக்கெல்லாம் உள்ளாகும்? கை நடுக்கமின்றி துப்பாக்கியை கையாள்வது அவனால் இயலக்கூடியதா?

இத்தகைய நுட்பமான கருவை மையப்படுத்தி எழுதப்பட்ட "கடைசி சல்யூட்" எனும் மொழிபெயர்ப்புச் சிறுகதையை(மூலம்: சாதத் ஹசன் மண்ட்டோ. தமிழாக்கம்: ராமாநுஜம்) உயிர்மையில் (அக்டோபர் 05 இதழ்) படித்தது முதல் அதன் தாக்கம் என்னை வெகுநேரம் ஆக்கிரமித்திருந்தது.

ரப் நவாஸ் காஷ்மீர் யுத்த சமயத்தில் பாகிஸ்தான் படையில் சுபேதாராக பணியாற்றுகிறான். அவனும், அவனுடைய படையினரும் இந்திய காஷ்மீர் எல்லைப்புற குன்று ஒன்றில் நிலைகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்நிலையில் பதுங்கியிருந்தபடி இந்திய படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எதிரிகளின் சண்டை சில சமயங்களில் விசித்திரமானதாக, துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் உரக்க கேட்கும் வசவுகளால் நடக்கிறது. முதலில் வசவுகளை பொறுத்துக்கொள்ளும் ரப் நவாஸ் படையினர், கொஞ்சம் நேரம் கழித்து அது தாள முடியாத அளவுக்கு போகப் போக வசவுக்கு பதில் வசவு என்று தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து எதிரிகளை தாக்க உத்தரவிடுகிறான். இரு தரப்பிலும் சில உயிரிழப்புகளுக்குப் பின் தாக்குதல் வெற்றிகரமாக முடிகிறது. எதிரிகள் பின் வாங்குகின்றனர்.

சிறிது இளைப்பாறல்களுக்குப் பிறகு மீண்டும் இருதரப்பிலும் தாக்குதல் தொடர்கிறது. இப்படியாக இரண்டு நாட்கள் கடக்கின்றன. வானிலை தாங்க முடியாத அளவிற்கு திடீரென்று குளிர்ச்சியாகிறது. ரப் நவாஸ் தன் ஆட்களுக்கு பலமுறை டீ கொடுக்க உத்தரவிடுகிறான். அதுவரை சலனமில்லாதிருந்த எதிர்தரப்பிலிருந்து 'ரப் நவாஸ்' என்று மிகச் சத்தமான குரல் ஒன்று கேட்கிறது. இவனும் பதில் குரல் கொடுத்தபடி அது யாரென்று அறிய முற்படுகிறான். அது அவனுடன் பிராயத்திலிருந்து ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக படித்து, ஒரே நாளில் ராணுவத்தில் சேர்ந்த அவனுடைய நெருங்கிய நண்பன் 'ராம் சிங்'. முதல் உலக யுத்தத்தில் இந்தியப் படையில் ஒன்றாக பல முனைகளிலிருந்து போரிட்டவர்கள். இப்போது காலம் இருவரையும் எதிரிகளாக்கி விட்டிருக்கிறது. நிர்பந்த எதிரிகள்!

கதையின் தொடர்ச்சியில் தோழமையான வசவுகளில் இருவரும் உரையாடிக்கொள்வதும், ரப் நவாஸின் விளையாட்டான துப்பாக்கி சுடுதல் ஒன்றில் ராம் சிங் காயமடைந்து இறப்பதுமென நேர்த்தியான பல கணங்கள் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மூலக்கதையின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிட்டுள்ளவர்கள் மூலத்தின் மொழி எதுவென்பதை குறிப்பிடவில்லை.

0 0

மேற்கண்ட கதையைப் படித்தவுடன் உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது ஈழநாதனின் 'போராட்டம்" என்ற கவிதை.
 
உங்கள் கருத்து:
புது மனைக்கு வாழ்த்துக்கள்
 
நன்றி இள! மனைக்கு நல்வரவு!
 
Post a Comment

<< முகப்பு

ராஜா,
நாமக்கல்.

மின்னஞ்சல
பழைய வீடு
 

முந்தைய பதிவுகள்:
10/02/2005 - 10/09/2005 10/23/2005 - 10/30/2005 12/25/2005 - 01/01/2006 04/02/2006 - 04/09/2006 04/09/2006 - 04/16/2006

செய்தி ஓடை - RSS(atom.xml)

Listed in tamizmaNam.com, where bloggers and  


readers meet ::  தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு,  


திரட்டப்படுகிறது




Powered by Blogger