கோவை வலைப்பதிவர் சந்திப்பு - என் அனுபவம்
தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு தொடர்ந்து சென்னையிலேயே நடைபெற்று வந்த சூழலில் "கோவையில் சந்திக்கலாமே" என்று காசியிடமிருந்து வந்த அழைப்பு உற்சாகத்தைக் கொடுத்தது. உடனே ஒப்புக்கொண்டேன்.
நாமக்கல்லில் இருந்து கோவைக்கு 4 மணி நேரம் பஸ் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கோவை சென்றடைந்து சந்திப்பு நிகழவிருந்த காசி வீட்டை அடையும்பொழுது மணி மாலை 7 ஆகிவிட்டது. சரியாக அதே சமயத்தில் வெளியே சென்றிருந்த ஐகாரஸ் பிரகாஷூம் வந்து சேர்ந்தார்.
காசி வாசலில் நின்று வரவேற்றார்(இல்லையென்றால் வீட்டை கண்டுபிடித்திருப்பது சிரமம் :-)) அவர் வீட்டு மாடி போர்ஷனில் கூட்டம் தொடங்கியது. உள்ளூர் வலைப்பதிவர்களாகிய சோடாபாட்டில் பாலாவும், பாலமுருகனும்(கலெக்டர் பாலா) முன்கூட்டியே வந்து காத்திருந்தனர். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். வலைப்பதிவு நண்பர்களைத் தவிர கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற இருவர் -- தமிழ் பயணி எனும் இணையதளத்தை நடத்திவரும் சிவா மற்றும் காசியின் நண்பர் வழக்கறிஞர் சுபாஷ். தமிழ் மடலாடற் குழுக்களின் வழியாக சிவாவை ஏற்கெனவே அறிவேன்.
முதலில் சோடாபாட்டில் பாலாவின் நண்பரும், விஜய நகரம் எனும் வலைப்பதிவு நடத்தி வந்தவரும், அண்மையில் விபத்தில் மறைந்தவருமான கார்த்திக் பற்றி நினைவுகூறப்பட்டது. கார்த்திக் தமிழில் அதிகம் எழுதவில்லை, எனினும், வலைப்பூ இதழில் ஒரு வாரம் ஆசிரியர் பணியை ஏற்றிருந்தவர் என்பதால் பழைய வலைப்பதிவாளர்கள் அவரை அறிவர்.
இது நிகழ்ச்சி நிரல் என்று எதுவும் வரையறுத்துக்கொள்ளாத நட்பு முறையிலான சந்திப்பு என்பதால் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து அளவளாவிக் கொண்டிருந்தோம். அவரவர் தொழில் மற்றும் வேலை சம்மந்தப்பட்ட பரிமாறல்கள் நடந்தன.
8.30 க்கு சுவையான சிற்றுண்டி. உண்மையில் பல்சுவை விருந்து என்றுச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.(அண்ணியாருக்கு நன்றி!)
சிறிது நேரத்தில் சிவா விடைபெற்றுச் சென்றார். சிவா முழுக்க தமிழில் இயங்கும் blog hosting ஒன்றை நிறுவும் முயற்சியில் இருக்கிறார். yarl.net க்கு பிறகு அப்படியொரு முயற்சி தமிழில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது வரவேற்கத் தக்கது. தமிழில் வலைப்பதிவு சேவைகள் எளிமைப்படுத்தப்படுவதோடு, அவற்றின் பயன்பாடு பரவலாக்கப்பட வேண்டியதும் அவசியம்.
சுகபோஜனம் முடிந்த அடுத்த அமர்வில் தற்சமயம் நம் முன்னிருக்கும் முக்கியமான பணியாகிய unicode standardization பற்றிய விவாதத்தை துவக்கி வைத்து காசி பேசினார். தமிழில் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு encoding, fontகள் முறைப்படுத்தப்பட்டு கணித்தமிழின் ஒரே encoding ஆக ஒருங்குறி நிலை நிறுத்தப்பட வேண்டும்; அதை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும்; அதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன -- என்பன இவ்விவாதத்தின் மையக் கருத்துக்களாக அமைந்திருந்தன. பயனர்களுக்கிடையே யூனிகோடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் இதனை செய்து முடிப்பதெல்லாம் தற்கால தமிழ்ச் சூழலில் சாத்தியமற்றது என்பதால் அரசு உத்தரவு ஒன்றால் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும் என்பதில் அனைவருக்கும் ஒத்த கருத்து இருந்தது. பல பயனுள்ள குறிப்புகளை பாலமுருகன் பகிர்ந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் செய்து முடிக்க வேண்டிய சில பொறுப்புகளை பிரகாஷ் ஏற்றுக்கொண்டார்.
விவாதத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளும், தீர்மானங்களும் சரியான திசையில் அமைந்திருந்தது குறித்து எனக்கு முழுதிருப்தி. பல காலமாக கருத்தியல் அளவில் மட்டும் தொடர்ந்து வரும் இவ்விஷயம், கணித்தமிழ் மிக வேகமாக பரவிவரும் இக்காலகட்டத்தில், வெகு விரைவில் பயன்பாட்டுக்கு வரவேண்டியது அதிமுக்கியமானதாகும்.
தீவிரமான ஒரு கருத்தாடலில் இருந்து சற்றே இறுக்கந்தளர்த்திக்கொள்ளும் விதமாக அனைவருக்கும் காபி வழங்கினார் காசி.
தன்னுடைய குறும்பட பயிற்சி பட்டரை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் பிரகாஷ். அதுபற்றி தன்னுடைய வலைப்பதிவில் விரிவாக எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த பயிற்சி பட்டரையை நடத்தும் நிழல் பத்திரிகையின் ஒரு பிரதியை பிரகாஷிடம் பெற்று படித்தேன். தமிழ் குறும்பட வட்டத்தில் தீவிரமான தளத்தில் இயங்கிவரும் அமைப்பாக தெரிகிறது. சென்னைவாசிகள் அதிர்ஷ்டசாலிகள்! அவர்களுக்கு இவை போன்றவைகளின் தொடர்புகளும், அவற்றின் செயல்பாடுகளும் அணுக்கமான தொலைவில் கிடைக்கின்றன.
அதற்கு பிறகு பல்வேறு பொது, அரசியல் விவகாரங்கள் குறித்த அளவளாவல்கள் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தன. காசியின் நண்பர் சுபாஷ் பல சுவையான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். பிறகு 1.30 மணியளவில், பேசி தீராத பல விஷயங்களுடன் அனைவரும் விடைபெற்றுக் கொண்டோம்.
சென்னைக்கு வெளியே வலைப்பதிவாளர்கள் சந்திப்பு பரவலாக்கப்படுவதின் முன்னோடி சந்திப்பாக நான் இதனைக் காண்கிறேன். இதை சாத்தியப்படுத்தியதற்கும், அன்பான உபசரிப்புகளுக்கும் காசி அவர்களுக்கு நன்றி!
(புகைப்படங்கள்
காசியின் பதிவில்)