களங்களும், காரணங்களும் மட்டுமே வேறு
கோவை வலைப்பதிவாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு ஊர் நோக்கி நான் பயணித்த பேருந்தில் 'இந்தியன்' திரைப்படம் ஒளிபரப்பானது. அதில் கமலும், சுகன்யாவும் வாழ்க்கையில் இணைய காரணமான முக்கிய சம்பவமாக இந்திய சுதந்திரப் போராட்ட காட்சி: சுகன்யா உள்ளிட்ட பெண் சுதந்திர போராளிகள் அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கிளர்ச்சி செய்கிறார்கள். அப்போது ஆங்கிலேயர்களினால் மேற்கொள்ளப்படும் போலீஸ் நடவடிக்கையின்போது அவர்கள் அணிந்துள்ள கதர் சேலைகள் உருவப்படுகின்றன. இதனால் அவமானம் தாங்காத அப்பெண்கள் அனைவரும் உயரமான ஒரு இடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
இருநூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி, அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் மீது பொதுவான காலனி ஆதிக்க அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை, சில கடும் ஒடுக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை மட்டுமே நான் படித்திருக்கிறேன். mass rape, comfort women மாதிரியான பாலியல் குற்றச்சாட்டுகளை படித்ததில்லை. அத்திரைக்காட்சியில் துகிலுரிப்பு சம்பவத்துக்கு காரணமான அதிகாரியென 'அட்கின்ஸன் துரை' என்பவர் பெயரும் சுட்டப்படுகிறது. இதனால் ஒருவேளை இது நான் அறிந்திராத உண்மைச் சம்பவம்தான் போலும் என இணையத்தில் தேடிப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. சுவாரஸ்யத்திற்கென அக்காட்சி வலிந்து புனையப்பட்டது என்றே தோன்றுகிறது.
00 00
பொதுவாகவே உலகின் பெரும்பாலான போர் நடவடிக்கைகள், இனக்கலவரங்கள், அடக்குமுறைகள் போன்றவற்றின் ஓர் அங்கமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் இருந்து வந்துள்ளன. எதிராளியை அதிகபட்ச அவமானத்துக்கு உட்படுத்துவதாகவோ அல்லது உள்ளார்ந்த பாலியல் இச்சைகளின் வெளிப்பாடாகவோ அவை கட்டவிழ்கின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்கள் மீது
ஜப்பானிய சேனையால் மேற்கொள்ளப்பட்ட
comfort women பாலியல் அடிமைத்தனங்கள் மற்றும் அண்மை கால வரலாற்று பதிவுகளில் காண கிடைக்கும்
போஸ்னிய-ஹெர்ஸ்கோவினா, ருவாண்டா, உகாண்டா, பங்களாதேஷ், லைபீரியா போன்ற நாடுகளின் உள்நாட்டு/அயல்நாட்டு போர்களின் போது பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையும்
படிக்கும்போது எத்துணை கொடுமையான வன்குற்றங்களெல்லாம் போர் என்னும் பொதுப் பெயரில், ஒரு குறுகிய வட்டத்துக்குள் பொதுமைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது புரிகிறது. மேலும், போரில் mass rape ஆக நிகழும் இதனைவிடவும் தீவிரமான பாலியல் குற்றங்கள் அங்கிங்கென உதிரிகளாக நம் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் நிகழ்ந்து வருகின்றன என்பதை அன்றாடம் தினசரிகளை புரட்டினாலே போதும்; புரிந்துகொள்ளலாம்.
பலஹீனமான நிலைக்கு ஆளாகும் பெண் கால வரையரையற்று எப்போதும் பாலியல் பாதுகாப்பற்றவளாகவே தொடர்கிறாள். களங்களும், கட்டமைக்கப்படும் காரணங்களும் மட்டுமே வேறுபடுகின்றன.